குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது


குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 7:07 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கஞ்சா விற்பனை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இயக்குனர் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்து, 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

247 பேர் கைது

மேலும் சட்ட விரோதமாக மது விற்றதாக 210 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 306 லிட்டர் மது வகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 12 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் நீதிமன்ற பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 31 பேர் என மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் 5 நாட்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறி தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய வகையில் 7 ஆயிரத்து 391 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வகையில் 361 நபர்களும், அதிவேகமாகவும், செல்போன் பேசிய படியும் வாகனங்களை இயக்கிய வகையில் 1,709 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story