கோவில் கருவறையில் மறைத்து வைத்திருந்த 2 சாமி சிலைகள் மீட்பு அர்ச்சகர் கைது


கோவில் கருவறையில் மறைத்து வைத்திருந்த 2 சாமி சிலைகள் மீட்பு அர்ச்சகர் கைது
x
தினத்தந்தி 17 March 2022 2:41 AM IST (Updated: 17 March 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

கோவில் கருவறையில் மறைத்து வைத்திருந்த 2 சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கோவில் அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்கோவில் கிராமத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த 4 உலோக சாமி சிலைகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. இதுதொடர்பாக வந்த புகாரின்பேரில் சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்த கோவில் அர்ச்சகர் சூரியமூர்த்தி(வயது 75) என்பவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவில் கருவறையில் மறைத்து வைப்பு

விசாரணையில், நெம்மேலி கிராமத்தில் உள்ள விசுவநாத சாமி கோவிலில் உள்ள விசாலாட்சி அம்மன் கருவறை மண்டபத்தில் சாமி சிலைக்கு பின்புறம் பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி ஆகிய 2 உலோக சாமி சிலைகளை சூரியமூர்த்தி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சூரியமூர்த்தியை கைது செய்த போலீசார், கருவறை மண்டபத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 உலோக சாமி சிலைகளையும் மீட்டனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த காத்தாயி அம்மன் வெள்ளி கவசம், சனீஸ்வரன் வெள்ளிக்கவசம், 2 வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் ஒரு வெள்ளிக் குடம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி என கூறப்படுகிறது.

Next Story