சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 700 அரங்குகளுடன் புத்தக கண்காட்சி; 24-ந்தேதி தொடங்குகிறது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 700 அரங்குகளுடன் கூடிய புத்தக கண்காட்சி வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
சென்னை புத்தக கண்காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சற்று தாமதமாக புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.முருகன், பொருளாளர் ஏ.கோமதிநாயகம் ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தொடக்க விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று பல ஆண்டுகளாக பதிப்புத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களை கவுரவிக்க உள்ளார்.
700 அரங்குகள்
ஒவ்வொரு நாளும் புத்தக கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறும். இந்த கண்காட்சி அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. கண்காட்சிக்கு அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். கண்காட்சியில் சுமார் 700 அரங்குகளுடன் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெற இருக்கின்றன.
புத்தக கண்காட்சியையொட்டி 21-ந்தேதி (நாளை) காலை 6 மணிக்கு சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் இருந்து மினி மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. இதை சென்னை போலீஸ் முன்னாள் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக, அரங்குகளுக்கான பாதைகள் வாசகர்கள் நெரிசலின்றி செல்வதற்கு ஏதுவாக விசாலமாக அமைக்கப்பட்டுள்ளன.
10 லட்சம் வாசகர்கள்
எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் ‘ரேக்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக சிறிய பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தலாம். மேலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய நூல்கள் தனி அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
அதேபோல், வருகிற 28-ந் தேதியன்று உலக அறிவியல் தினத்தையொட்டியும், மார்ச் 8-ந்தேதியன்று மகளிர் தினத்தையொட்டியும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கண்காட்சி தொடங்குவதில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளிஅரங்கில் புத்தக வெளியீடுகள், சிறந்த புத்தகங்களின் அறிமுகம், விமர்சனம் ஆகியவை நடைபெறும்.
கண்காட்சியில் வழக்கமாக வழங்கப்படும் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர சில பதிப்பாளர்கள் 20 முதல் 30 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவார்கள். இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. இந்த ஆண்டும் அந்த இலக்கை எட்டுவோம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story