கிராமங்களுக்கு அடிக்கடி சென்று பணியாற்றுங்கள் அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம்


கிராமங்களுக்கு அடிக்கடி சென்று பணியாற்றுங்கள் அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம்
x
தினத்தந்தி 14 July 2019 12:08 AM IST (Updated: 14 July 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஏழைகள், கீழ்த்தட்டு மக்களின் வாழ்வு மேம்படுவதற்கு கிராமங்களுக்கு அடிக்கடி சென்று பணியாற்றுங்கள் என்று அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சட்டம் ஒழுங்கை பேணுவது என்பதுதான் எந்த சமரசமும் செய்ய முடியாததும், முன்னுரிமை அளிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேம்பாட்டுத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதில் உள்ளது.

இதில், மாநில நிர்வாகத்தின் கண்களும் காதுகளுமாக கலெக்டர்கள் உள்ளனர். அவர்கள்தான் மக்களின் தேவை களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

முதல்-அமைச்சர் கவனம்

அனைத்து நிலையிலும் பொருளாதார மேம்பாடு ஏற்பட்டால் மட்டுமே, சமூக பொருளாதார மேம்பாடு ஏற்படுவதோடு ஏழைகளின் வாழ்க்கையும் உயரும். அதற்கேற்ற வகையில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் பல குடும்பத்தினர் ரேஷன் அட்டைகளை வாங்காமல் உள்ளனர். ஆதார் அட்டைகள், வங்கிக் கணக்குகள் இல்லாத குடும்பங்களும் உள்ளன.

அதுபோன்ற கீழ்நிலையில் உள்ள மக்களுக்கும் நல்ல வீடு, அணுகு சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள் போன்ற வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் கவனமாக உள்ளார்.

கிராமங்களுக்கு செல்லுங்கள்

மேலும் சில முக்கிய விஷயங்களை கலெக்டர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் ஆர்வமாக உள்ளார். அதன்படி, கிராமங்களுக்கு அடிக்கடி சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும்.

பட்டா மாற்றம், பல்வேறு சான்றிதழ் பெறாத நிலை, தகுதியானவர்களைச் சென்று சேர வேண்டிய திட்டங்கள், பொது வினியோகம் உள்ளிட்ட அம்சங்களில் உள்ள குறைகளைத் தீர்க்க வேண்டும்.

ஊரகப் பெண்கள் மேம்பாடு

ஊரகப் பகுதிகளை பொருளாதார மேம்பாட்டுப் பகுதிகளாக, குறிப்பாக ஊரகப் பெண்களை மேம்படுத்துவது தற்போது அவசியமாக உள்ளது. வேளாண்மை மற்றும் அதன் உபதொழில்கள், பால் சம்பந்தப்பட்ட தொழில்கள், உணவு தானியங்களை மதிப்பு கூட்டும் தொழில் போன்ற சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வரும் தொழில்களை செய்ய அவர் களை ஊக்குவிக்கலாம்.

குடிசை வீடுகள் எத்தனை உள்ளன என்பதைக் கண்டறிந்து நல்ல வீடுகளை ஏழைகளும் உரிய காலத்துக்குள் அடைய உதவிகளைச் செய்ய வேண்டும். நீர் பாதுகாப்பு, நீர் நிலைகள் மேம்பாடு, குடிமராமத்துத் திட்டம் போன்றவற்றில் பொதுமக்களும் தங்களை ஈடுபடுத்த ஊக்குவிக்க வேண்டும்.

ரகசிய அறிக்கை

முக்கிய திட்டங்களின் நன்மைகள் அனைத்தும் மக்களை சரியான நேரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் சென்றடைந்துவிட்டதா என்பதை கலெக்டர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கான அதிக பணிகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவற்றுக்கு நாள் குறித்து, அவை செய்யப்படுகிறதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும்.

ஊரக மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் என்பதால் அது மற்றும் அதன் உப தொழில்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு சேவையாற்றுவதில் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். குறிப்பாக, ஏழைகள், கீழ்த்தட்டில் இருக்கும் மக்களுக்கு உங்கள் சேவை மிகவும் அவசியமாக செய்யப்பட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒருமுறை அனுப்பப்பட வேண்டிய ரகசிய அறிக்கையை சில கலெக்டர்கள் அனுப்புவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த நிலை இருக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story