தமிழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது


தமிழகத்தில் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 17 July 2018 10:22 PM (Updated: 17 July 2018 10:22 PM)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வு 23-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை, 

தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளிலும் மற்றும் திண்டிவனத்தில் உள்ள சரஸ்வதி சட்டக்கல்லூரி ஆகியவற்றில் 5 வருட ஒருங்கிணைந்த எல்.எல்.பி. படிப்பில் சேர 1,411 இடங்கள் உள்ளன.

இந்த படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை வெளியிடப்பட்டது.

23-ந்தேதி தொடங்குகிறது

இதற்கான கலந்தாய்வு வருகிற 23-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை முடிவடைகிறது. கலந்தாய்வு குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பழைய கட்டிடத்தில் நடைபெறுகிறது.

23-ந்தேதி பொதுப்பிரிவினருக்கு (குறைந்தது 91.5 கட் ஆப் ) நடைபெறுகிறது. 24-ந்தேதி பழங்குடியினருக்கும் (76.500), அருந்ததியினருக்கும்(79.875) ஆதிதிராவிடர்களுக்கும் (83.875) நடக்கிறது.

கடிதம்

25-ந்தேதி மிகவும் பிற்பட்டோர்களுக்கும் மற்றும் சீர்மரபினர்களுக்கும் (83.125), பிற்பட்டோர் முஸ்லிம்களுக்கும் (81.750) நடைபெற உள்ளது. 26-ந்தேதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (84.250 ) கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குரிய கடிதம் அனுப்பப்படும். கலந்தாய்வு கடிதம் கிடைக்காதவர்கள் கட்ஆப் மதிப்பெண் வரும் போது வந்து கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.

இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் நாராயண பெருமாள் தெரிவித்துள்ளார். 

Next Story