அரக்கோணம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து; ராட்சத கிரேன் மூலம் மீட்பு பணி தீவிரம்


அரக்கோணம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து; ராட்சத கிரேன் மூலம் மீட்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 May 2017 10:45 PM (Updated: 15 May 2017 6:37 PM)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

அரக்கோணம்,

தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை ராட்சத கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் 500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

ரெயில் தடம் புரண்டது

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ரெயிலில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரெயில் என்ஜின் மற்றும் அதைத்தொடர்ந்து இருந்த 3 பொது பெட்டிகள் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதையடுத்து டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார்.

திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் எழுந்து அலறி கூச்சலிட்டனர்.

மீட்பு பணி

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் மனோகரன், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதனை தொடர்ந்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி மேற்பார்வையில் தலைமை பொறியாளர்கள், கட்டுப்பாட்டு அலுவலர்கள் தலைமையில் 500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்டு மாற்றுப்பாதையில் வைப்பதற்கான மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பெட்டிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து ராட்சத கிரேன் கொண்டு செல்லப்பட்டது. தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒரு மணி நேரம் தாமதம்

எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற 20 பெட்டிகளை ரெயிலில் இருந்து துண்டித்து மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு ரெயில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றது. டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தடம் புரண்ட ரெயிலில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் ஆகியோர் பயணம் செய்தனர். ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதை தொடர்ந்து அமைச்சர் மற்றும் நீதிபதியை, அதிகாரிகள் தனித்தனி கார் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.

Next Story