15-ந் தேதி ராஜராஜேசுவரி திருக்கோலம்:நவராத்திரி நாட்களில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரங்களில் காட்சி தருகிறார்- கொலுவில் வைக்க பொம்மைகள் வழங்கலாம்


15-ந் தேதி ராஜராஜேசுவரி திருக்கோலம்:நவராத்திரி நாட்களில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரங்களில் காட்சி தருகிறார்- கொலுவில் வைக்க பொம்மைகள் வழங்கலாம்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவில் வருகிற 15-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் காட்சி தருகிறார். கோவிலில் அமைக்கப்படும் கொலுவுக்கு பக்தர்கள் பொம்மைகள் வழங்கலாம்.

மதுரை



நவராத்திரி விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.

பொம்மைகள் வழங்கலாம்

இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நவராத்திரி விழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும். விழா நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மேலும் கொலு சாவடியில் அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள் இதர பொம்மைகளை உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.

மீனாட்சி அலங்காரம்

நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். அதன்படி 15-ந் தேதி ராஜராஜேசுவரி அலங்காரமும், 16-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 17-ந் தேதி அர்ச்சுனனுக்கு பாசுபதம் அருளியது, 18-ந் தேதி ஏகபாதமூர்த்தி, 18-ந் தேதி கால்மாறி ஆடியபடலம், 19-ந் தேதி தபசு காட்சி, 20-ந் தேதி ஊஞ்சல், 21-ந் தேதி சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, 22-ந் தேதி மகிசாசூரமர்த்தினி அலங்காரமும், 23-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story