இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை


இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை
x
தினத்தந்தி 17 Nov 2022 9:12 AM GMT (Updated: 17 Nov 2022 9:16 AM GMT)

ராமேசுவரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்தது.

கொழும்பு,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

அந்த 15 மீனவர்களும் கடந்த 7-ந் தேதி மன்னாரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த15 மீனவர்கள் இன்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 10 ஆண்டுகள் இலங்கை எல்லைக்குள் மீனவர்கள் வரக்கூடாது என நிபந்தனை விதித்து 15 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். நிபந்தனையை மீறினால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார்.

விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story