10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு


10-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 5:01 AM GMT)

திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி

திருச்சுழி அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடுகல்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா தும்முசினப்பட்டி கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக குலசேகரநல்லூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர், தாமரைக்கண்ணன், செல்லபாண்டியன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது அவை 10-ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் நடுகல் சிற்பம் என்பது தெரியவந்தது.

இரு வீரர்கள்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நமது முன்னோர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக நினைவு கற்களை நட்டு வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அந்த கற்கள் தொடக்கத்தில் ஒழுங்கற்றவையாகவும், உயரமாகவும் இருந்தன. அதை நெடுங்கல் என்று அழைப்பர். இந்த நெடுங்கல் வழிபாட்டின் தொடர்ச்சியாக நடுகல் வழிபாட்டை கூறலாம்.

இந்த நடுகற்களில் கல்வெட்டுகள், உருவங்கள் எவையேனும் ஒன்று இடம் பெற்றிருக்கும் அல்லது இரண்டுமே இடம்பெற்று இருக்கும். தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லில் இரண்டு உருவங்கள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.

புடைப்பு சிற்பமாக

இந்த நடுகல் ஒன்றரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வீரர்கள் அள்ளி முடிந்த கொண்டையுடனும், காதுகளில் பத்திர குண்டலங்களும், இடையில் இடைக்கச்சையுடனும் செதுக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தில் வலது புறம் உள்ள வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் இடம்பெற்றுள்ளது. இடதுபுறம் உள்ள வீரனின் வலதுகையில் வாள் போன்ற ஆயுதமும், இடது கையில் ஒரு ஆயுதமும் ஏந்தி போர் புரியும் வீரர்கள் போன்று சிற்பம் முற்கால பாண்டியருக்கே உரிய கலைபாணியில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் உருவ அமைப்பை வைத்துப் பார்க்கும்போது அக்காலத்தில் இப்பகுதியில் நடந்த சண்டையில் ஈடுபட்டு ஊர் நலனுக்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.


Next Story