குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி; மர்ம நபருக்கு வலைவீச்சு


குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி; மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:46 PM GMT)

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்


அதிக லாபம்

செஞ்சி தாலுகா கணக்கன்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 19). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது பகுதிநேர வேலை என வந்ததை கிளிக் செய்ததும் வாட்ஸ்-அப் மூலம் நேரடியாக இணைப்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அதிலிருந்து தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் ஸ்னேப்டீல் ஆன்லைன் நிறுவனத்தின் நேர்காணல் நடத்துபவர் என்றும் பகுதிநேர வேலையாக டாஸ்க் முடித்தால் 5 நிமிடத்திற்குள் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்றுகூறி ஒரு லிங்கை அனுப்பி வைத்துள்ளார். உடனே சக்திவேல், அந்த லிங்கினுள் சென்று தனது விவரங்களை பதிவு செய்ததுடன் தனக்கான பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்தார்.

வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

அதன் பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் சக்திவேலை தொடர்புகொண்ட நபர், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய சக்திவேல், அந்த நபர் கூறிய வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 132-ஐ 10 தவணைகளாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் சக்திவேலுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்த நபர் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து சக்திவேல், விழுப்புரம் சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story