1 கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை-ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்


1 கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை-ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்
x

ராமநாதபுரம் பகுதியில் 1 கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தக்காளி வியாபாரமும் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் தக்காளியின் விலை மிக உச்சத்தில் இருந்தது. குறிப்பாக 1 கிலோ தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது தக்காளியின் விலை உயர்வால் தக்காளி வாங்குவதையும் பொதுமக்கள் வெகுவாக குறைத்து வந்தனர்.இதனால் தக்காளி வியாபாரமும் பாதிக்கப்பட்டு வந்தது. தக்காளியின் விளைச்சல் குறைவே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள அரண்மனை பகுதியில் உள்ள காய்கறி கடைகள், பஸ் நிலையம், மார்க்கெட் என பல்வேறு இடங்களிலும் 1 கிலோ தக்காளி ரூ.25 எனவும், 2 கிலோ தக்காளி ரூ.50 எனவும் கூவி, கூவி வியாபாரிகள் விற்பனை செய்தனர். கடந்த மாதம் வரையிலும் 1 கிலோ தக்காளி ரூ.200 என ராமநாதபுரத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் தக்காளியை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் வீடுகளுக்கு வாங்கி சென்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த மல்லிகா கூறியதாவது, கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விலை இருந்தது. இதனால் தக்காளியை வாங்குவதை தவிர்த்து வந்தோம். தற்போது மீண்டும் தக்காளியின் விலை குறைந்து ரூ.25 என வந்து விட்டது. அதனால் வழக்கம்போல் தக்காளியை கூடுதலாகவே வீடுகளுக்கு சமைப்பதற்கு வாங்கி செல்கின்றோம். விலை குறைந்துள்ளது மகிழ்ச்சி தான் என்றார்.

1 கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் தக்காளியின் விற்பனையும் அதிகரித்துள்ளதுடன் பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர் தக்காளியின் விளைச்சல் சீராக உள்ளதாலே விலை குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டத்தின் ஒரு சில ஊர்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story