சாக்லெட் கெட்டுபோகாமல் பாதுகாக்க...


சாக்லெட் கெட்டுபோகாமல் பாதுகாக்க...
x
தினத்தந்தி 5 Nov 2021 6:16 PM IST (Updated: 5 Nov 2021 6:16 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பலகார பொருட்களுள் சாக்லெட்டுக்கு தனி இடமுண்டு. சாக்லேட்டை வாங்கி வந்த உடனேயே சாப்பிட்டுவிடுவார்கள். அதிக நேரம் வைத்திருந்தால் பிசுபிசு தன்மைக்கு மாறி விடுவதே அதற்கு காரணம்.

அதனை தவிர்க்க நிறைய பேர் பிரிட்ஜில் உள்ள பிரீசரில் சேமித்து வைத்து ருசிப்பார்கள். அப்படி அதிக நேரம் சாக்லெட்டை குளிர்ச்சி நிலையில் வைத்திருந்து உடனே சாப்பிடுவது நல்லதல்ல. சாக்லெட்டுகள் விரைவில் கெட்டுப்போகாது. ஒருசில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சாக்லெட்டை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக வைத்திருந்து ருசிக்கலாம்.

இருள் சூழ்ந்த இடத்தில் சாக்லெட்டை வைத்திருப்பது நல்லது. அந்த இடம் ஈரப்பதம் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால், சாக்லெட்டுக்குள் உள்ளடங்கி இருக்கும் கொக்கோ, சர்க்கரை இரண்டும் தனியாக பிரிந்து விடும். திறந்து மூடும் வகையிலான டிராயர்கள், அலமாரிகளில் சாக்லெட்டை வைக்கலாம். குளிர்ச்சியான இடமும் சாக்லெட்டுக்கு உகந்தது. பிரிட்ஜில் வைத்திருந்தால் அதனை வெளியே எடுத்து குளிர்த்தன்மை நீங்கிய பிறகு சாப்பிடுவது நல்லது.

சாக்லேட்டை அதிக மணம் கொண்ட பொருளோடு சேர்த்து வைக்கக்கூடாது. ஏனென்றால் அந்த பொருட்களின் வாசனையை சாக்லெட் உறிஞ்சி விடும். குறிப்பாக பிரிட்ஜுக்குள் சாக்லெட்டையும், வாழைப்பழத்தையும் ஒன்றாக வைத்திருந்தால் சாக்லெட் சாப்பிடும்போது பழத்தின் வாசனை எட்டிப்பார்க்கும்.

கூடுமானவரை பிரிட்ஜ் பிரீசரில் சாக்லெட் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு வைத்தால் சாக்லெட் கடினமாகிவிடும். அதன் சுவையும் குறைந்துவிடும். அதேபோல் வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் சாக்லெட்டை பாதுகாக்கக்கூடாது. அப்படி வைத்திருந்தால் விரைவாகவே கரைந்து போய்விடும்.

கொக்கோவின் சுவையையும் இழக்க நேரிடும். கொக்கோ கரைய தொடங்கிவிட்டாலே அதன் மேல் வெண்மை நிறத்தில் அடுக்கு உண்டாகிவிடும். அதை சாப்பிடும்போது மென்மை தன்மையும் இல்லாமல் போய்விடும். சாக்லெட் கவரை பிரித்துவிட்டால் உடனே சாப்பிட்டுவிடுவதுதான் நல்லது. பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை சேமித்து வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


Next Story