'பாரதம்' என பெயர் மாற்றுவதால் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து விடுமா? - கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி


பாரதம் என பெயர் மாற்றுவதால் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து விடுமா? - கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி
x
தினத்தந்தி 6 Sep 2023 7:00 PM GMT (Updated: 6 Sep 2023 7:00 PM GMT)

பாரதம் என்று பெயர் மாற்றுவதால் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்து விடுமா? என கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பினார்.

மும்பை,

பாரதம் என்று பெயர் மாற்றுவதால் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்து விடுமா? என கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பினார்.

பாரதம் பெயர் சர்ச்சை

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாடு விருந்துக்கு நிகழ்ச்சி தொடர்பான ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பிய அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதில் பாரதம் என குறிப்பிடப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில் மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனும், கர்நாடக மந்திரியுமான பிரியங்க் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்குமா?

மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள், நாட்டின் ஆட்டத்தின் போக்கை மாற்றப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக தற்போது அவர்கள் பெயர் மாற்றுபவர்களாக மாறிவிட்டனர். இந்த பெயர் மாற்றத்தின் காரணமாக நமது அதிர்ஷ்டம் மாறிவிடப்போகிறதா? நமது பொருளாதாரம் மேம்பட போகிறதா? அல்லது மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்க போகிறதா? இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள நோக்கம் மிக எளிமையானது. இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் ஒரு தந்திரம் அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார். சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய சர்ச்சை கருத்துகள் தொடர்பாக பதில் அளித்த அவர், "ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. சமத்துவத்தை போதிக்காத எந்த மதமும் என்னை பொறுத்தவரை ஒரு மதம் இல்லை. இது மிகவும் எளிமையானது. இதை ஏன் சிக்கலாக்கி கொள்ள வேண்டும்" என்றார்.


Related Tags :
Next Story