அரசு ஆஸ்பத்திரிகளின் நிலைமையை மாற்றுவோம்- மந்திரி ஹசன் முஷ்ரிப் வாக்குறுதி


அரசு ஆஸ்பத்திரிகளின் நிலைமையை மாற்றுவோம்- மந்திரி ஹசன் முஷ்ரிப் வாக்குறுதி
x
தினத்தந்தி 5 Oct 2023 7:00 PM GMT (Updated: 5 Oct 2023 7:00 PM GMT)

அடுத்த 4 மாதங்களில் அரசு ஆஸ்பத்திரிகளின் நிலைமையை மாற்றுவோம் என மந்திரி ஹசன் முஷ்ரிப் உறுதி அளித்து உள்ளார்.

மும்பை,

அடுத்த 4 மாதங்களில் அரசு ஆஸ்பத்திரிகளின் நிலைமையை மாற்றுவோம் என மந்திரி ஹசன் முஷ்ரிப் உறுதி அளித்து உள்ளார்.

31 நோயாளிகள் உயிரிழப்பு

நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் சமீபத்தில் 48 மணி நேரத்தில் 31 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அடுத்த 4 மாதத்தில் மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளின் நிலை மாறும் என மாநில மருத்துவ கல்வி துறை மந்திரி ஹசன் முஷ்ரிப் உறுதி அளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- சவாலான அறுவை சிகிச்சைகளை தனியார்-அரசு பங்களிப்புடன் அரசு ஆஸ்பத்திரிகளில் மேற்கொள்ள மாநில அரசு ஏற்கனவே முடிவு எடுத்து உள்ளது. விரைவில் அதை செயல்படுத்த முயற்சி செய்வோம். 2 மாதங்களுக்கு முன் தான் நான் மாநில மருத்துவ கல்வி மந்திரியாக பொறுப்பு ஏற்றேன்.

4 மாதத்தில் நிலைமையை மாற்றுவோம்

மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள், அதுசார்ந்த அரசு ஆஸ்பத்திரிகளில் அடுத்த 4 மாதங்களில் நல்ல மாற்றங்களை காண முடியும் என்பதை நான் உறுதி அளிக்கிறேன்.மும்பை, புனே, அவுரங்காபாத் என எந்த பகுதியாக இருந்தாலும் அந்த மாற்றம் ஏற்படும். சிறுநீரகம் மாற்றம், கல்லீரல் மாற்றம் போன்ற சுகாதார சேவைகளும் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடங்கப்படும்.அரசு ஆஸ்பத்திரிகளில் நிலவும் பற்றாக்குறைகள், சிக்கல்கள் குறித்து மும்பை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story