சிவாஜி பார்க்கில் சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் நடக்கும்- உத்தவ் தாக்கரே நம்பிக்கை


சிவாஜி பார்க்கில் சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் நடக்கும்- உத்தவ் தாக்கரே நம்பிக்கை
x

சிவாஜி பார்க்கில் சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் நடைபெறும் என உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை,

சிவாஜி பார்க்கில் சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் நடைபெறும் என உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அனுமதி மறுப்பு

சிவசேனா கட்சி கடந்த 1966-ம் ஆண்டு பால் தாக்கரேயால் மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஆண்டுதோறும் சிவாஜி பார்க் மைதானத்தில் நடத்தப்படும் சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அணி பிரிவு சென்றுவிட்டதால் சிவசேனா 2 ஆக உடைந்துள்ளது.

இந்தநிலையில் அக்டோபர் மாதம் 5-ந் தேதி தசரா கொண்டாடப்படுவதால், தசரா பொதுக்கூட்டத்தை சிவாஜி பார்க்கில் நடத்த அனுமதி கேட்டு ஆதித்ய தாக்கரே விண்ணப்பித்தார். ஆனால் இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் காரணமாக இந்த ஆண்டு சிவசேனா சார்பில் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொண்டர்கள் தயார்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் நேற்று பேசியதாவது:-

"மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிவாஜி பூங்காவிற்கு தசரா விழாவிற்கு வர சிவசேனா தொண்டர்கள் தயாராகி விட்டனர். சிவசேனாவின் வருடாந்திர கூட்டம் சிவதீர்த்தில்(சிவாஜி பார்க்கிற்கு சிவசேனா பயன்படுத்தும் சொல்) கண்டிப்பாக நடைபெறும்.

சிவசேனா தங்கள் வருடாந்திர தசரா பேரணியை மும்பையில் நடத்த அனுமதி கேட்கின்றனர். ஆனால் அதிகாரிகள் எங்கள் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கின்றனர். இது தான் ஏக்நாத் ஷிண்டேவின் அடக்குமுறை அரசாகும்".

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story