மும்பை வாலிபரிடம் 'டேட்டிங்' செல்ல பெண் ஏற்பாடு செய்வதாக ரூ.2¼ லட்சம் மோசடி; சிவகங்கையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு


மும்பை வாலிபரிடம் டேட்டிங் செல்ல பெண் ஏற்பாடு செய்வதாக ரூ.2¼ லட்சம் மோசடி; சிவகங்கையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

பெண்ணுடன் ‘டேட்டிங்’ செல்ல ஏற்பாடு செய்வதாக கூறி மும்பை வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த சிவகங்கையை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை,

பெண்ணுடன் 'டேட்டிங்' செல்ல ஏற்பாடு செய்வதாக கூறி மும்பை வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த சிவகங்கையை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ.2.34 லட்சம் மோசடி

மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் கடந்த மே மாதம் பெண்களுடன் ஊர் சுற்றும் 'டேட்டிங்' குறித்து ஆன்லைனில் தேடினார். அப்போது ஆன்லைன் மூலம் அறிமுகமான நபர் ஒருவர், நீங்கள் விரும்பும் வகையில் 'டேட்டிங்' செல்ல பெண்ணை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதை நம்பி கிலுகிலுப்பு அடைந்த வாலிபர் அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் வரை அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட நபர் வாலிபருக்கு 'டேட்டிங்' செல்ல பெண்கள் யாரையும் அனுப்பி வைக்கவில்லை. ஏமாற்றம் அடைந்த வாலிபர் சம்பவம் குறித்து கடந்த மாதம் முல்லுண்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிவகங்கையை சேர்ந்தவர்

விசாரணையில், 'டேட்டிங்' செல்ல பெண் ஏற்பாடு செய்வதாக மும்பை வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையை சேர்ந்த வருண்(வயது23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் சிவகங்கை விரைந்தனர். வாலிபரின் வீட்டுக்கு சென்ற போது அவர் அறுவை சிகிச்சை செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுத்துவிட்டு திரும்பி வந்தனர். மோசடி செய்ததில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை வருணிடம் இருந்து மீட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். உடல்நிலை சரியான உடன் அவர் இதேபாணியில் வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story