கமிஷனுக்கு ஆசைப்பட்டு போலி போலீசாரிடம் ரூ.10 லட்சத்தை இழந்த தொழிலதிபர்


கமிஷனுக்கு ஆசைப்பட்டு போலி போலீசாரிடம் ரூ.10 லட்சத்தை இழந்த தொழிலதிபர்
x
தினத்தந்தி 13 Aug 2023 7:30 PM GMT (Updated: 13 Aug 2023 7:30 PM GMT)

கமிஷனுக்கு ஆசைப்பட்டு போலி போலீசாரிடம் ரூ.10 லட்சத்தை தொழிலதிபர் ஒருவர் இழந்துள்ளார்.

மும்பை,

கமிஷனுக்கு ஆசைப்பட்டு போலி போலீசாரிடம் ரூ.10 லட்சத்தை தொழிலதிபர் ஒருவர் இழந்துள்ளார்.

ரூ.10 லட்சம்

மும்பை மாட்டுங்காவை சேர்ந்தவர் குதாராம். தொழிலதிபரான இவருக்கு நண்பரின் மூலம் விஜய் கோலி என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. விஜய் கோலி தன்னிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், இதனை ரூ.500 நோட்டுகளாக மாற்றி கொடுத்தால் 5 சதவீதம் கமிஷன் தருவதாகவும் குதாராமிடம் தெரிவித்தார். இதனை நம்பிய அவர் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இதற்கு ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ரூ.10 லட்சத்தை அவர் தயார் செய்து வைத்திருந்தார். இந்தநிலையில் சில நாட்கள் கழித்து விஜய் கோலி அவரை தொடர்பு கொண்டு தயார் செய்த பணத்துடன் நவிமும்பையில் உள்ள ஒரு இடத்திற்கு வருமாறும், அதை மாற்ற ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

போலீசில் புகார்

இதனை நம்பிய குதாராம் நண்பர் ஜெய்மேத்தா என்பவருடன் பணத்தை எடுத்துகொண்டு காரில் நவிமும்பைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர் கூறிய இடத்தில் யாரும் இல்லை. இதையடுத்து அவர்கள் விஜய் கோலியை தொடர்பு கொண்டனர். அப்போது சில நிமிடங்களில் வந்துவிடுவதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே அங்குவந்த 2 பேர் தொழிலதிபர் குதாராமிடம் தாங்கள் போலீசார் என தெரிவித்ததுடன், காரில் சோதனையிட்டனர். பின்னர் காரில் இருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துகொண்டு குதாராமை போலீஸ் நிலையம் வருமாறு கூறி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அவர் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று விசாரித்ததில் அங்கு அவர் கூறிய அடையாளத்தில் போலீசார் யாரும் பணியில் இல்லை என தெரியவந்தது. இதன்மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குதாராம் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் பணம் பறித்த கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story