தானே ரெயில் நிலையத்தில் இருந்து 14 வயது சிறுமி கடத்தல் - ஒருவர் கைது


தானே ரெயில் நிலையத்தில் இருந்து 14 வயது சிறுமி கடத்தல் - ஒருவர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2023 7:30 PM GMT (Updated: 2 Aug 2023 7:30 PM GMT)

தானே ரெயில் நிலையத்தில் இருந்து 14 வயது சிறுமி கடத்தப்பட்டாள். அவளை கடத்திய 55 வயது ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

தானே,

தானே ரெயில் நிலையத்தில் இருந்து 14 வயது சிறுமி கடத்தப்பட்டாள். அவளை கடத்திய 55 வயது ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

கடத்தல்

தானே மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 19-ந் தேதி தானே ரெயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனாள். அவளது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரபு பாக் என்ற 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலை வைத்து பிவண்டி, கஜ்ரத், நவிமும்பை, மட்காவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொண்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மீட்பு

இந்தநிலையில் அந்த நபர் சிறுமியை கடத்தி ராய்காட் மாவட்டம், கோரேகாவ் பகுதியில் தனது வீட்டில் வைத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டதுடன், பிரபு பாக்கை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். இந்த கடத்தலுக்கான காரணம் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story