அரசு பள்ளி மதிய உணவில் புழு, கல் கிடக்கிறது; போலீசில் புகாரளிக்க சென்ற 4-ம் வகுப்பு மாணவி


அரசு பள்ளி மதிய உணவில் புழு, கல் கிடக்கிறது; போலீசில் புகாரளிக்க சென்ற 4-ம் வகுப்பு மாணவி
x

கோப்பு படம்

தெலுங்கானாவில் அரசு பள்ளி மதிய உணவில் புழு, கல் கிடக்கிறது என போலீசில் புகாரளிக்க சென்ற 4-ம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மிரட்டியுள்ளது.


மீர்பேட்டை,


தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் மீர்பேட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் உள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று உள்ளார்.

இதனால், போலீசார் ஆச்சரியத்துடன் மாணவியை பார்த்துள்ளனர். அந்த மாணவி, தங்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் புழுக்கள் கிடக்கின்றன. சில சமயங்களில் உணவில் கற்களும் கிடைக்கின்றன. அதனால், மாணவிகளால் சாப்பிட முடியவில்லை என கூறியுள்ளார்.

இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் அதற்கு பலனில்லை. அவர்கள் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியேற்றி விடுவோம் என அவர்கள் மிரட்டினர் என்றும் மாணவி புகாராக கூறியுள்ளார்.

இந்த புகாரை பெற்று கொண்ட மீர்பேட்டை காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி மகேந்தர் ரெட்டி உடனடியாக ஒருவரை பள்ளிக்கு அனுப்பி சோதனையிட செய்துள்ளார்.

இதில், பள்ளி கூடத்தில் அழுகி போன காய்கறிகள், கெட்டு போன சமையல் எண்ணெய் மற்றும் பூச்சிகள் நிறைந்த அரிசி ஆகியவை காணப்பட்டு உள்ளன. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story