எம்.பி.க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி: பதிவுகள் தீவிரம்


எம்.பி.க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி
x

18-வது மக்களவையில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ‘பயோ மெட்ரிக்’ பதிவுகளை வழங்க வேண்டும்.

புதுடெல்லி,

18-வது மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று தங்களுக்கான அடையாள அட்டையை பெற்று வருகிறார்கள். இதற்கான பதிவுப்பணி கடந்த 4-ந் தேதி பிற்பகலிலேயே தொடங்கிவிட்டது. வருகிற 16-ந் தேதி வரை பதிவுகள் நடக்கின்றன. 18-வது மக்களவையில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது 'பயோ மெட்ரிக்' பதிவுகளை வழங்க வேண்டும். பதிவு நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடக்கிறது.

மேலும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய 'சி.ஜி.எச்.எஸ்.' மருத்துவ பயன்பாட்டுக்கான பதிவும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து நேற்று முன்தினம் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பதிவு செய்தார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அந்த கட்சியின் மற்றொரு எம்.பி. ரவிக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பதிவு செய்தனர். இதேபோல் மேற்கு டெல்லியில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.பி. கமல்ஜீத் செராவத் தனது அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களில் புதிய எம்.பி.க்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் வரை அவர்களின் தற்காலிக தங்குமிடமாக ஜன்பத்தில் உள்ள 'வெஸ்டர்ன் கோர்ட்' விடுதியும், மாநில அரசுகளின் இல்லங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.


Next Story