பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை


பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணை
x

கோப்புப்படம்

பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு, டாக்டர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம்கோர்ட்டு முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஆர்.ஜி.கர் மருத்துவமனை நிர்வாகம், மேற்கு வங்காள அரசின் செயல்பாடுகள், மாநில போலீசாரின் முதல்கட்ட விசாரணை ஆகியவைகுறித்து சுப்ரீம் கோர்ட்டு விரிவாக விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்றும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story