வயநாடு நிலச்சரிவு: இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆயிரம் பேர் மீட்பு


வயநாடு நிலச்சரிவு: இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆயிரம் பேர் மீட்பு
x

கேரளா வயநாடு நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் 1,000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன்படி வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனைத்தொடர்ந்து வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவால் கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பாலம் உருவாக்கப்பட்டு 1,000 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே 690 அடி பெய்லி பாலம் அமைக்க கேரள மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது பெங்களூருவின் மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் சென்டரில் இருந்து 330 அடி வரை பாலம் சாலை வழியாக செல்ல உள்ளது. மீதமுள்ள பகுதிகள் டெல்லி கண்டோன்மென்ட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படுகின்றன என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

விரைவான மற்றும் பயனுள்ள வகையில் நிவாரண முயற்சிகளை செய்வதற்காக இந்திய ராணுவம், மாநில அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story