முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் விரைவில் விடுவிப்பு


முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் விரைவில் விடுவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2024 11:45 PM GMT (Updated: 11 Jun 2024 11:45 PM GMT)

என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு, கடந்த 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

புதுடெல்லி,

முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் விரைவில் விடுவிக்கப்படுகின்றனர். பிற துணை ராணுவப்படைகளிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு, கடந்த 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதல்கள், விமான கடத்தல்கள் ஆகியவற்றின்போது பயன்படுத்துவதற் காக அக்குழு தொடங்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் அதன் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புக்கு அனுப்பப்பட்டனர்.

தற்போது, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ள 9 மிக முக்கிய பிரமுகர்களுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளித்து வருகிறது. உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, மத்திய கப்பல்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி ராமன்சிங், முன்னாள் மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளனர்.

இதுபோல், இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் என்ற துணை ராணுவப்படையின் பாதுகாப்பில், பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் உள்ளனர்.

இதுதவிர, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகிய துணை ராணுவப்படைகள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட 200-க்கு மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன.

முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து கருப்பு பூனைப்படை முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற யோசனை, கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் பல நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தால், கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் தேவைப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் முக்கிய பிரமுகர்களை பாதுகாப்பது தேவையற்ற சுமையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது.

தற்போது, 3-வது முறையாக மோடி அரசு பதவியேற்றுள்ள நிலையில், விரைவில் இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்கிறது. அதன்படி, ஒவ்வொரு முக்கிய பிரமுகருக்கான பாதுகாப்பை வாபஸ் பெறுவதா, குறைப்பதா, அதிகரிப்பதா என்று முடிவு செய்யப்படும்.

மேலும், கருப்பு பூனைப்படை, இந்தோ திபெத்திய எல்ைல போலீஸ் ஆகியவற்றை முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பொறுப்பில் இருந்து முற்றிலும் விடுவிக்க முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்மூலம், சுமார் 450 கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் அயோத்தி ராமர் கோவில், தென்மாநிலங்களின் முக்கிய பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அதன்பிறகு, அப்படைகளின் பாதுகாப்பில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அல்லது மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெறுவார்கள்.


Next Story