சூதாட்டத்தில் நண்பர்களிடம் மனைவியை பணயம் வைத்த கணவன்


சூதாட்டத்தில் நண்பர்களிடம் மனைவியை பணயம் வைத்த கணவன்
x

கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஷஹபாத் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், எனக்கு 2013-ல் திருமணம் நடந்தது. வரதட்சணைக்காக என் மாமனாரும் என் கணவரும் என்னை சித்ரவதை செய்து தாக்கினர். என் கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர், அவர் சூதாட்டத்தின்போது சுமார் ஏழு ஏக்கர் நிலம் மற்றும் எனது நகைகள் அனைத்தையும் இழந்துவிட்டார்.

மேலும் அவரது நண்பர்களுடன் சூதாட்டத்தின்போது என்னை பணயம் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யவும் அனுமதியளித்துள்ளார். அவர் எனக்கு தண்ணீர் கூட கொடுக்காமல், அவரது நண்பர்கள் இருக்கும்போது தாக்கினார். இதனால் நான் எனது அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஆனால், செப்டம்பர் 4-ம் தேதி, அவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்து என் கையை உடைத்து என்னை வீட்டுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர்.

அவர் என் ஆடைகளைக் கிழித்து, என்னைத் தாக்கினார், அவருடைய நண்பர்களும் என்னை தாக்கினர். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டு வந்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். என் கணவர் அவர்களுக்காக வைத்திருப்பதை சேமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எனக்கு செய்த கொடுமைகளை என்னால் இப்போது வெளியில் சொல்ல முடியாது. அதை நான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவேன்' என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஸ்ரா தெரிவித்தார்.


Next Story