லாரியின் டீசல் டேங்க் வெடித்து விபத்து: துணிவுடன் செயல்பட்ட பங்க் ஊழியர் - வீடியோ வைரல்


லாரியின் டீசல் டேங்க் வெடித்து விபத்து: துணிவுடன் செயல்பட்ட பங்க் ஊழியர் - வீடியோ வைரல்
x

லாரி டேங்க் வெடித்ததும் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் செயல்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், புவனகிரி புறநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன. லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக தெறித்து ஓடினர்.

ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து பங்கில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story