ஒடிசா விபத்தில் உருக்குலைந்த ரெயில் பெட்டிகள்: இரவிலும் தொடரும் மறுசீரமைப்பு பணிகள்


ஒடிசா விபத்தில் உருக்குலைந்த ரெயில் பெட்டிகள்: இரவிலும் தொடரும் மறுசீரமைப்பு பணிகள்
x

ஒடிசா விபத்தில் உருக்குலைந்த ரெயில் பெட்டிகளை மறுசீரமைப்பு பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை நோக்கி வந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இது அருகில் உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் கோரமண்டல் எக்ஸ்பிரசின் பின்பக்க வண்டி மூன்றாவது பாதையில் தடம் புரண்டது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மூன்றாவது பாதையில் எதிர் திசையில் இருந்து, தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசா விபத்தில் உருக்குலைந்த ரெயில் பெட்டிகளை மறுசீரமைப்பு பணிகள் தற்போது இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக ரெயில் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித சக்தியுடன் அயராது உழைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, ஏழுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரெயில்கள், 3-4 ரெயில்வே மற்றும் சாலை கிரேன்கள் முன்கூட்டியே சீரமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளது. இதனிடையே விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகளை ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

விபத்து நடந்த இடத்தில், தடம் புரண்ட ரயில்களின் இடிபாடுகள் மற்றும் சிதைந்த பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்படுவதால், மறுசீரமைப்பு பணிகள் இரவு வரை தொடர்ந்து வருகின்றன.




Next Story