ரெயில் விபத்து, பலி... இறுதி சடங்கின்போது உயிருடன் வந்து நின்ற நபரால் பரபரப்பு


ரெயில் விபத்து, பலி... இறுதி சடங்கின்போது உயிருடன் வந்து நின்ற நபரால் பரபரப்பு
x

எல்லப்பாவுக்கு அனைவரும் விடை கொடுக்க தயாரானபோது, ஆட்டோவில் இருந்து எல்லப்பா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இறங்கி குடும்பத்தினருக்கு ஆச்சரியம் அளித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தின் பஷீராபாத் மண்டலத்திற்கு உட்பட்ட நவாந்தகி பகுதியில் வசித்து வருபவர் பிட்டல எல்லப்பா (வயது 40). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவில் விகாராபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்து ஒன்று ஏற்பட்டது.

இதில் சிக்கியவர்களை அடையாளம் காணும் பணி நடந்தது. அப்போது விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் அருகே, செல்போன் ஒன்று கிடைத்துள்ளது. இதனை ஆய்வு செய்ததில் அது எல்லப்பாவின் செல்போன் என உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சொந்த ஊரில் உள்ள அவருடைய உறவினர்களுக்கு, அவருடைய மரணம் பற்றிய தகவலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால், எல்லப்பாவின் மனைவி விமலம்மா மற்றும் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். தலையில்லாத எல்லப்பாவின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்பின் இறுதி சடங்கிற்கான பணிகள் தொடங்கி நடந்தன. வீடு முழுவதும் உறவினர்களின் அழுகையும், வருத்தமும் சூழ்ந்து காணப்பட்டது. அனைவரும் எல்லப்பாவுக்கு விடை கொடுக்க தயாரானபோது, வீட்டு வாசலில் யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.

அதில் இருந்து எல்லப்பா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இறங்கி வெளியே வந்திருக்கிறார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் ஒருசேர அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இறுதி சடங்கை நிறுத்தினார்கள். அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால், தலையில்லாத உடலால் இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டது என விகாராபாத் ரெயில்வே துணை காவல் ஆய்வாளர் சங்கரைய்யா கூறினார்.

இந்த விசயத்தில் நடந்தது என்னவென்றால், எல்லப்பாவின் செல்போன் கடந்த வெள்ளி கிழமை திருடு போனது. அதனை திருடியவர் விபத்தில் சிக்கிய அந்த ரெயிலில் பயணித்து உள்ளார். அவரிடம் இருந்து செல்போன் கிடைத்ததும், உயிரிழந்தது எல்லப்பா என முடிவுக்கு வந்துள்ளனர்.

எல்லப்பா 3 நாட்களாக வேறு இடத்தில் கூலி வேலை பார்த்து வந்திருக்கிறார். அவர் தந்தூர் ரெயில் நிலையத்திலேயே தங்கியிருக்கிறார். உண்மையில் உயிரிழந்தது, எல்லப்பாவின் செல்போனை திருடிய நபர். அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எல்லப்பா மீண்டும் திரும்பியதில், அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.


Next Story