கணவர் குடும்பத்தினர் சித்ரவதை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் குடும்பத்தினர் சித்ரவதை: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

விபின் தாக்கியதில் அஸ்வினியின் காதில் காயம் ஏற்பட்டது.

கண்ணூர்,

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பேரி பகுதியை சேர்ந்தவர் பிரதீபன். இவருடைய மனைவி ஓமனா. இவர்களது மகள் அஸ்வினி (வயது 25). இவருக்கும், கப்பாட் பெரிங்கரை பகுதியை சேர்ந்த விபின் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

விபின் தாக்கியதில் அஸ்வினியின் காதில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அஞ்சரகண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதனால் அஸ்வினி கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதத்துக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 15-ந் தேதி விபினின் சகோதரி திருமணம் நடந்தது. இதில் அஸ்வினி கலந்துகொண்டு விட்டு தாய் வீட்டிற்கு திரும்பினார்.

16-ந் தேதி தூங்க சென்றவர் மறுநாள் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் பெற்றோர் கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. பின்னர் பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது, அஸ்வினி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே அவரை மீட்டு அஞ்சரகண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அஸ்வினி இறந்தார். இதுதொடர்பாக அஸ்வினியின் பெற்றோர், தனது மகளை விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பினராயி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததால், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story