சலுகை கட்டணத்தில் மாணவிக்கு டிக்கெட் வழங்க மறுத்த அரசு பஸ் கண்டக்டருக்கு தர்ம அடி


சலுகை கட்டணத்தில் மாணவிக்கு டிக்கெட் வழங்க மறுத்த அரசு பஸ் கண்டக்டருக்கு தர்ம அடி
x

சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்க முடியாது என கண்டக்டர் பிரதீப் கூறியுள்ளார்.

கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயம் அருகே கோட்டயம்-மாளிக்கடவு வழித்தடத்தில் கடந்த 4-ந் தேதி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவிக்கு, பள்ளி சீருடை மற்றும் மாணவர்களுக்கான சலுகை அனுமதி அட்டை இல்லாததால், சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்க முடியாது என கண்டக்டர் பிரதீப் கூறியுள்ளார்.

இதனால் மாணவிக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த பஸ்சில் இருந்து இறங்கிய மாணவி, நேராக வீட்டிற்கு சென்று தனது சகோதரனிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், தனது நண்பர்களுடன் சென்று, திரும்பி வந்த அதே பஸ்சை வழிமறித்து உள்ளே ஏறினர்.

பின்னர் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பிரதீப்பை சரமாரியாக தாக்கி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்த சக பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்த சம்பவம் குறித்து சிங்கவனம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மாணவியின் சகோதரர் உள்ளிட்ட வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதே வேளையில், மாணவியிடம் மோசமாக நடந்து கொண்ட கண்டக்டர் பிரதீப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story