சனாதனத்தை ஒழிப்பதே "இந்தியா" கூட்டணியின் நோக்கம் - பிரதமர் மோடி பேச்சு


சனாதனத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 14 Sep 2023 7:58 AM GMT (Updated: 14 Sep 2023 8:20 AM GMT)

சனாதனத்தை ஒழிப்பதே "இந்தியா" கூட்டணியின் நோக்கம் என பிரதமர் மோடி பேசினார்.

பினா, மத்தியப் பிரதேசம்,

மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஜி20 மாநாட்டை இந்தியா எப்படி வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். இது நமது நாட்டின் கூட்டு சக்திக்கு சான்றாகும். ஜி20 பிரதிநிதிகள் நம் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டனர். ஜி20 மாநாட்டின் வெற்றிக்கான பெருமை நாட்டு மக்களுக்குச் சேரும். இது 140 கோடி மக்களின் வெற்றி.

இந்தியா கூட்டணியினர் சுவாமி விவேகானந்தர் மற்றும் லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த 'சனாதன தர்மத்தை' அழிக்க விரும்புகிறார்கள். இன்று அவர்கள் வெளிப்படையாகவே சனாதனத்தை குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள். நாளை நம் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து 'சனாதனிகளும்', நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கு ஒரு தலைவர் இல்லை. எதிர்க்கட்சிகளில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்கள். இந்திய கலாச்சாரத்தை தாக்க மறைமுக செயல்திட்டத்துடன் இந்தியா கூட்டணி வந்துள்ளது.

சனாதனம் மீதான தாக்குதல் இந்திய கலாச்சாரம் மீதான தாக்குதலாகும். யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்துகொண்டே செல்லும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story