தங்கும் விடுதியில் செல்போனை 'சார்ஜ்' போட்டபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


தங்கும் விடுதியில் செல்போனை சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x

தங்கும் விடுதியில் செல்போனை ‘சார்ஜ்’ போட்டபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியாகி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.இந்த நிலையில் தங்கும் விடுதியில் செல்போனுக்கு 'சார்ஜ்' போட்ட போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 25). இவர் பெங்களூருவில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார்.

இதற்காக பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். அதே அறையில் அவருடன் சில பேர் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீனிவாஸ் சாப்பிடுவதற்காக புறப்பட்டார். அந்த சமயத்தில், தனது செல்போனை 'சார்ஜ்' போட்டு விட்டு செல்ல அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி தனது செல்போனை அவர் 'சார்ஜ்' போட்டுள்ளார். அந்த சமயத்தில் திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கிடையே சீனிவாசை காப்பாற்ற அவருடன் தங்கியிருந்த ஒருவர் முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. ஆனால், அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து பசவேஸ்வரா நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சீனிவாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனுக்கு 'சார்ஜ்' போட்டபோது, சீனிவாஸ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து பசவேஸ்வரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story