சிறையில் உள்ள கேரள பத்திரிக்கையாளர் சித்திக் ஜாமின் கோரி மனு - உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


சிறையில் உள்ள கேரள பத்திரிக்கையாளர் சித்திக் ஜாமின் கோரி மனு - உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 29 Aug 2022 8:15 AM GMT (Updated: 29 Aug 2022 9:40 AM GMT)

சிறையில் உள்ள கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பன் ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க கேரளாவை சேர்ந்த பத்திர்க்கையாளர் சித்திக் கப்பன் 2020 அக்டோபர் 5-ம் தேதி ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்றார். ஆனால், அவரை உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் போலீசார் கைது செய்தனர்.

கப்பனுடன் சேர்த்து அவருடன் வந்த மேலும் 3 பேரையும் உ.பி. போலீசார் கைது செய்தனர். பத்திரிக்கையாளர் கப்பனுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும், ஹத்ராஸ் விவகாரத்தை அவர் பிரச்சனைக்குரிய வகையில் கையாள முயற்சித்ததாகவும் அதனாலேயே கப்பனை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கப்பன் தற்போது மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் உள்ள தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சித்திக் கப்பன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாமின் கோரி சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் அளிக்க உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க.. உ.பி. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள பத்திரிக்கையாளரை சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


Next Story