விமானிகளுக்கு 20 சதவீத சம்பள உயர்வு - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு!


விமானிகளுக்கு 20 சதவீத சம்பள உயர்வு - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு!
x

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் விமானிகளுக்கு 20 சதவீதம் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் விமானிகளுக்கு 20 சதவீத சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

எமர்ஜென்சி கிரெடிட் லைன் கியாரண்டி திட்டத்தின் (ஈசிஎல்ஜிஎஸ்) முதல் தவணை தொகை விமான நிறுவனத்தால் பெறப்பட்ட பின்னர், விமானிகளுக்கு கடந்த மாதம் 6 சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட்டது.அரசாங்கத்தின் ஈசிஎல்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் ஸ்பைஸ்ஜெட் கடனுக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆகவே இரண்டாவது தொகை விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து 20 சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட உள்ளது. மேலும் ஊதிய பிடித்த தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியும் வரவு வைக்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 80 விமானிகளை திடீரென மூன்று மாத விடுமுறைக்கு அனுப்பி உள்ளது. இந்த மூன்று மாதத்திற்கு 80 விமானிகளுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு வழங்கியிருப்பது விமானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் 7 முறை தரையிக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டிஜிசிஏ விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பிய நிலையில், சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் மீதான கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, 29 அக்டோபர் 2022 வரை 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Next Story