ம.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி


ம.பி.யில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி
x

Image Courtesy: ANI

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அம்மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 30 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாடியாவில் ராஜ்கர் கோட்டைக்கு கீழே இருந்த பழமையான சுவர் இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து அங்கு இருந்த வீட்டின் மேல் விழுந்தது. இதில் 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இந்த சம்பவம் பற்றி அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் டாடியா கலெக்டர் சந்தீப் மக்கின் தெரிவித்தார்.

உயிரிழந்த 7 பேரில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.


Next Story