கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை; தொழிலாளி போலீசில் சரண்


கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை; தொழிலாளி போலீசில் சரண்
x

சென்னகிரி அருகே பட்டப்பகலில் கழுத்தை அறுத்து ரவுடியை கொன்றுவிட்டு தொழிலாளி போலீசில் சரணடைந்த சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு;

ரவுடி படுகொலை

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜாகீர்(வயது 50). தனியார் பஸ் ஏஜெண்டான இவர், ரவுடியும் ஆவார். இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்தவர் சலீம், தொழிலாளி. இவருக்கும், ஜாகீருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை ஜாகீர், தெரலுபாலு சர்க்கிளில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சலீம் கீழே இறங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜாகீரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஜாகீர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசில் சரண்

இதைதொடர்ந்து சலீம், மோட்டார் சைக்கிளில் சென்னகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொலையான ஜாகீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சலீம், ஜாகீரை பணத்தகராறு, மனைவியுடனான கள்ளத்தொடர்பு காரணமாக கொன்றதாக கூறப்படுகிறது.

ஆனாலும் கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து சென்னகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தை அங்கிருந்த மக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.


Next Story