ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்பு


ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 19 Sep 2024 5:56 AM GMT (Updated: 19 Sep 2024 8:43 AM GMT)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டரை வயது பெண் குழந்தை அங்கு இருந்த 35 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

மேலும் குழாய் மூலம் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்பட்டு, கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு முதல் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story