'ராமஜென்ம பூமி என்பது அரசியல் விவகாரம் அல்ல, எங்கள் கலாசார விவகாரம்' - ராஜ்நாத் சிங்


ராமஜென்ம பூமி என்பது அரசியல் விவகாரம் அல்ல, எங்கள் கலாசார விவகாரம் - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 31 Dec 2023 5:27 PM GMT (Updated: 1 Jan 2024 1:22 AM GMT)

2047-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் உள்ள டேஸ்பூர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-

"கலை, அரசியல், மதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த ஆளுமைகளை இந்த நாட்டிற்கு அசாம் மாநிலம் வழங்கியுள்ளது. இன்றைய இளைய தலைமுறையை பொறுத்தவரை, ஆசிரியர்களை விட மாணவர்கள் புதுமையான சிந்தனைகளை கொண்டுள்ளனர். மாணவர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

2027-ம் ஆண்டில் உலகின் 3 மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும். 2047-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக நாம் இருப்போம். பிரதமர் மோடியின் தலைமையில், எதையும் செய்து காட்டக்கூடிய வகையில் இந்தியா செயலாற்றி வருகிறது.

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா ஜனவரி 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமஜென்ம பூமி என்பது வாக்குகளை பெறுவதற்காக பயன்படும் அரசியல் விவகாரம் அல்ல, அது எங்கள் கலாசார விவகாரம்."

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story