பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை; வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்


பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை; வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 9 Nov 2022 6:45 PM GMT (Updated: 9 Nov 2022 6:46 PM GMT)

பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார். இங்கு வந்தேபாரத் ரெயில், விமான நிலைய 2-வது முனையத்தை தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:

பிரதமர் மோடி வருகிறார்

ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் விதான சவுதாவுக்கு வருகிறார்.

பிறகு எம்.எல்.ஏ.க்கள் பவனுக்கு வந்து உள்ள கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வருகிறார். அங்கு காலை 11 மணியளவில் சென்னை-மைசூரு வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அத்துடன் அதே இடத்தில் பாரத் கவுரவ் காசி தரிசன ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.

வெண்கல சிலை

அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது அதிநவீன முனையத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் அந்த விமான நிலைய வளாகத்தில் 108 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடாவின் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்த அங்கு நடைபெறும் விழாவில் மோடி பேசுகிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பகல் 3 மணியளவில் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் தமிழ்நாட்டின் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் அவர் பயணிக்க இருக்கும் சாலைகளில் புதிதாக தார் போடப்பட்டுள்ளன. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிட்டி நிலையம் முழுவதுமாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கல சிலை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்து பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதாவுக்கு பலம் சேர்க்கும் வகையில் அவர் இனி அடிக்கடி கர்நாடகம் வந்து செல்வார் என்று கூறப்படுகிறது.


Next Story