பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்


பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்
x

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

டெல்லி,

இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள், 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதையடுத்து, நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 9வது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச கவர்னர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள், நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். ஆனால், நாளை நடைபெற உள்ள இக்கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் புறக்கணித்துள்ளனர்.

அதன்படி, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி கேரளா, கர்நாடகா, பஞ்சாப், இமாச்சலபிரதேச முதல்-மந்திரிகளும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தபின் நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதேவேளை, நாடு சுதந்திரம்பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்குவது குறித்தும் நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story