தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய மந்திரி பதில்


தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய மந்திரி பதில்
x

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவது என்பது ஜனநாயக நாட்டில் வரவேற்கத்தக்கது. மாநிலங்கள் ஒன்றுக்கொன்று எதிர் கருத்து தெரிவிப்பது, அரசியலமைப்பு மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவின் மதிப்புகளுக்கு எதிரானது. இந்திய மக்களின் ஞானத்தைக் கொண்டும், பலதரப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக்கொள்கை. தேசிய கல்விக்கொள்கைக்கு உங்கள் 'கொள்கை ரீதியான' எதிர்ப்பில் நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.

* தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா?

* தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?

* தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

* தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

* தேசிய கல்விக் கொள்கை கொண்டுள்ள சமத்துவம் மற்றும் பாரபட்சமற்ற கட்டமைப்புகளை எதிர்க்கிறீர்களா?

அப்படி இல்லாவிட்டால், அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.


Next Story