ரூ.10 ஆயிரத்திற்காக மூதாட்டியை கொன்ற வியாபாரி கைது


ரூ.10 ஆயிரத்திற்காக மூதாட்டியை கொன்ற வியாபாரி கைது
x

ரூ.10 ஆயிரத்திற்காக மூதாட்டியை கொலை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

மைசூரு:

ரூ.10 ஆயிரத்திற்காக மூதாட்டியை கொலை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

காய்கறி வியாபாரி

மைசூரு டவுன் நஞ்சிமளிகே பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அதேப்பகுதியில் கெஞ்சம்மா (வயது 65) என்பவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டி நஞ்சிமளிகே பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் கெஞ்சம்மா படுகாயம் அடைந்தார். அவரை ஆட்டோ டிரைவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோ டிரைவர் கெஞ்சம்மாவை நஞ்சிமளிகே பகுதியில் இறக்கி விட்டார். அப்போது மூதாட்டியிடம் ஆட்டோ டிரைவர் செலவுக்காக ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மூதாட்டி கொலை

இதனை அப்பகுதியில் நின்ற காய்கறி வியாபாரி ரவி பார்த்துள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் தூங்கி கொண்டு இருந்த மூதாட்டியை ரவி கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஆர்.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், காய்கறி வியாபாரி மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, டவுன் பகுதியில் பதுங்கி இருந்த ரவியை கே.ஆர்.நகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story