மேகாலயா சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் நடந்த தேசிய மாநாட்டில் முதல்-மந்திரி சங்மா அறிவிப்பு!


மேகாலயா சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் நடந்த தேசிய மாநாட்டில் முதல்-மந்திரி சங்மா அறிவிப்பு!
x

மேகாலயாவில் தேர்தலில் பாஜக உட்பட எந்தக் கட்சியுடனும் என்பிபி கூட்டணி வைக்காது என்று முதல் மந்திரி சங்மா கூறினார்.

புதுடெல்லி,

மேகாலயாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக உட்பட எந்தக் கட்சியுடனும் என்பிபி கூட்டணி வைக்காது என்று முதல் மந்திரி கான்ராட் சங்மா கூறினார்.

தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கான்ராட் சங்மா மற்றும் பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளும் சித்தாந்த ரீதியாக பல்வேறு பிரச்சினைகளில் ஒரே பக்கத்தில் இல்லை.

ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும்.மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில தேர்தல்களில் என்பிபி கவனம் செலுத்தும்.

அதே வேளையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) தேசிய மக்கள் கட்சி (என்பிபி) தொடர்ந்து நீடிக்கும்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேகாலயாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மேகாலயாவில் 2018 சட்டமன்றத் தேர்தலில் என்பிபி தனியாகப் போட்டியிட்டது.

ஆனால், காங்கிரசுக்கு அடுத்தபடியாக அக்கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதனால், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.


Next Story