காங்கிரசில் மீண்டும் இணைகிறேனா? - மறுப்பு தெரிவித்த குலாம் நபி ஆசாத்


காங்கிரசில் மீண்டும் இணைகிறேனா? - மறுப்பு தெரிவித்த குலாம் நபி ஆசாத்
x

காங்கிரசில் மீண்டும் குலாம் நபி ஆசாத் இணையப்போவதாக தகவல் வெளியானது.

ஸ்ரீநகர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல தரப்பினரும் இந்த பாத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் இணைந்துள்ளனர்.

இதனிடையே, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 109-வது நாளான கடந்த 24-ம் தேதி டெல்லியை எட்டியது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி உரையாற்றினார். அதன் பின்னர், கிறிஸ்துமஸ் - புத்தாண்டையொட்டி யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளைக்கு பின் ஜனவரி 3-ம் தேதி யாத்திரை மீண்டும் டெல்லியில் இருந்து தொடங்குகிறது.

யாத்திரை காஷ்மீரை செல்லும்போது ராகுல்காந்தியுடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் இணைந்து யாத்திரை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி ஜனநாயக அசாத் என்ற கட்சியை துவங்கினார். ஆனால், ஆசாத் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீரை அடையும்போது அவருடன் இணைந்து குலாம் நபி ஆசாத் யாத்திரையில் பங்கேற்று மீண்டும் காங்கிரசில் இணைய உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், தான் மீண்டும் காங்கிரசில் இணையப்போவதில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.


Next Story