நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் இல்லை : மத்திய மந்திரி விளக்கம்


நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள்  இல்லை : மத்திய மந்திரி விளக்கம்
x

மக்களவையில் நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மக்களவையில் கேள்வி எழுப்பினார். பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகபெரிய மோசடி என மக்களவையில் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பொதுத் தேர்வு மசோதாவை முந்தைய காங்கிரஸ் அரசு ஏன் கொண்டுவரவில்லை? நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. தற்போது நடந்த சிறு சிறு பிழைகள் கூட இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் அரசுதான் கல்வித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர தவறிவிட்டது. காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை எங்கள் அரசு சரி செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேட்டை நான் அரசியலாக்க விரும்பவில்லை, ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல் மந்திரியாக இருந்த போது எத்தனை முறை வினாத்தாள் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது . மக்களவையில் நீங்கள் சத்தம் போடுவதால், அது உண்மையாகிவிடாது, நாட்டின் தேர்வு முறையே ஒரு மோசடி என்று கூறியிருக்கிறீர்கள், மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த மிக மோசமான தகவலில் இதுதான் மிக மோசமான பேச்சாக இருக்கும், இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்றார்.


Next Story