மும்பையில் பயங்கரம்: முன்னாள் மந்திரி சுட்டுக்கொலை - 2 பேர் கைது


மும்பையில் பயங்கரம்: முன்னாள் மந்திரி சுட்டுக்கொலை - 2 பேர் கைது
x

Image Courtacy: PTI

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாபா சித்திக் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

மும்பை,

66 வயதான பாபா சித்திக். கடந்த 1976 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். முன்னாள் மந்திரியான பாபா சித்திக் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

இதன்படி மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாபா சித்திக், மும்பை பாந்திரா கிழக்கு நிர்மல் நகர், கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஷீசான் சித்திக் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்று இருந்தார். அப்போது அலுவலகம் அருகே பாபா சித்திக்கை பின்தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இந்த சம்பவத்தில் பாபா சித்திக் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மும்பை போலீசார் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் மந்திரி பாபா சித்திக் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியவர்களில் 2 பேரை போலீசார் பிடித்தனர். அதில் ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் அரியானாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியின் பிரபுல் படேல் கூறுகையில், "பாபா சித்திக் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த குற்றச் செயலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை தரப்பட வேண்டும். அவர்களை விட்டு விடக்கூடாது. இந்த கடினமான சூழலில் பாபா சித்திக் குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்" என்று அவர் கூறினார்.




Next Story