மகள்,மகனுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை


மகள்,மகனுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 6:46 PM GMT)

பெங்களூருவில் மகள், மகனுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்து உள்ளது.

மகாலட்சுமி லே-அவுட்:-

திருமணம் ஆகவில்லை

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யசோதா(வயது 70) என்பவர் தனது மகள் சுமனா(40), மகன் நரேஷ் குப்தா(36) ஆகியோருடன் வசித்து வந்தார். யசோதாவுக்கு இன்னொரு மகளும் உள்ளார். அவர் திருமணம் முடிந்து கணவருடன் ராஜாஜிநகரில் வசித்து வருகிறார். சுமனாவுக்கும், நரேசுக்கும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் சுமனாவுக்கு பல இடங்களில் மாப்பிள்ளை தேடியும் அவருக்கு சரியான வரன் அமையவில்லை என்று தெரிகிறது. சுமனாவுக்கு திருமணம் முடிந்த பின்னர் தான், தானும் திருமணம் செய்து கொள்வதாக நரேஷ் கூறி இருந்தார். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு யசோதாவின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

செல்போனை எடுக்கவில்லை

ஏற்கனவே மகன், மகளுக்கு திருமணம் ஆகாத சோகத்தில் இருந்து வந்த யசோதாவுக்கு அவரது கணவர் உயிரிழந்தது மேலும் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக யசோதாவின் செல்போன் எண்ணுக்கு உறவினர்கள் அழைத்து உள்ளனர். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை.

இதுகுறித்து ராஜாஜிநகரில் வசித்து வரும் மகளிடம், உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர். இதனால் அவர் யசோதா, சுமனா, நரேஷ் ஆகியோரின் செல்போன் எண்களுக்கு அழைத்து உள்ளார். அப்போது 3 பேரும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

விஷம் குடித்து தற்கொலை

இதையடுத்து காவலாளி, யசோதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் யசோதா, சுமனா, நரேஷ் ஆகியோர் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். அருகில் விஷபாட்டிலும் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கணவர் இறந்த வருத்தத்திலும், மகன், மகளுக்கு திருமணம் நடக்காத சோகத்திலும் யசோதா தற்கொலை செய்து இருக்கலாம் என்றும், தாய் இறந்து விட்டதால் சுமனாவும், நரேசும் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

பரபரப்பு

ஆனாலும் 3 பேரின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story