உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு


உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு
x

உத்தரகாண்ட் மாநில மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படிப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியிலும் கற்பிக்கப்படும்.

டேராடூன்,

இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை மந்திரி அமித் ஷா கடந்த அக்.16-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படிப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியிலும் கற்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியில் பாடத் திட்டத்தைத் தயாரிக்க, மருத்துவக் கல்வித் துறை 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள பாடத் திட்டத்தைப் படித்து நிபுணர் குழு வரைவைத் தயாரிக்கும்.

இதுகுறித்து சுகாதாரத்துரை மந்திரி டாக்டர் தன் சிங் ராவத் கூறுகையில், "மத்திய அரசு இந்தி மொழிக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் பயிற்றுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சிஎம்எஸ் ராவத் தலைமையில் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தியில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான பாடத்திட்டங்களை இந்தக் குழு நன்றாக ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும். இதையடுத்து, அந்த பாடத்திட்டத்தை ஏற்பதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, அடுத்த கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் இந்தியில் மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படும்" என தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்துக்குப் பிறகு, இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு தொடங்கும் இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும்.


Next Story