பெண் டாக்டர் கொலை வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை


பெண் டாக்டர் கொலை வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

கொல்கத்தாவில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் குடும்பத்தினரை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9-ம் தேதி காலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த அவர், 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்தார். கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் வெளிநபர் ஒருவரை கைது செய்தனர். எனினும் மருத்துவக்கல்லூரியின் அனைத்து பிரிவுகளுக்கும் அவர் சர்வ சாதாரணமாக சென்றுவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதேநேரம் இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்தில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்தவர்களும் இருக்கக்கூடும் என சக டாக்டர்கள் மற்றும் கொல்லப்பட்ட டாக்டரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டாக்டர்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் வீட்டுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார். அங்கு அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இந்த வழக்கின் மர்மத்தை விலக்க 18-ம் தேதி வரை போலீசாருக்கு கெடு விதித்தார். இதனிடையே இளம் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி பி ஐ விசாரணை கேட்டு கொல்கத்தா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெண் டாக்டர் கொலை வழக்கு மற்றும் இந்த சம்பவம் தொடர்பான வேறு சில மனுக்களும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.


Next Story