கர்நாடகா: 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு; சித்தராமையா அதிரடி உத்தரவு


கர்நாடகா: 7 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு; சித்தராமையா அதிரடி உத்தரவு
x

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்த சூழலில், குடிசைவாழ் மக்களுக்கு இலவச கொசு வலை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் பருவமழை காலத்தில் ஏற்பட கூடிய நோய் தொற்றுகளை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது பற்றி முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, மாநிலத்தில் நடப்பு ஆண்டில் 7,362 பேருக்கு டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

டெங்கு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனியாக ஒரு வார்டுக்கு 10 படுக்கை வசதிகளை அமைக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எப்போதெல்லாம் மழை பெய்யுமோ, அப்பேது டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டில் டெங்குவுக்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர். குடிசைவாழ் மக்களுக்கு இலவச கொசு வலை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்காக நேற்றும், இன்றும் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன. கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில், டெங்குவை பரப்பக்கூடிய கொசுக்களின் உற்பத்தியை எப்படி குறைப்பது என்பதற்கான விசயங்களை கடுமையாக கண்காணித்து, முறையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கர்நாடக சுகாதார மந்திரி தினேஷ் குண்டுராவ் நேற்று கூறினார். இந்நிலையில், முதல்-மந்திரி சித்தராமையாவின் உத்தரவு இன்று வெளிவந்து உள்ளது.


Next Story