புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம்...!
சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பெங்களூரு,
Live Updates
- 2 Sep 2023 8:04 AM GMT
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்கான பயணத்தை தொடங்கியுள்ளது.
- 2 Sep 2023 6:53 AM GMT
ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிரிந்து செல்லும் 3-வது நிலை நிறைவு: இஸ்ரோ தகவல்
இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் 3-வது நிலை நிறைவடைந்து உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
- 2 Sep 2023 6:22 AM GMT
சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம்...!
சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
- 2 Sep 2023 6:09 AM GMT
ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தப்படுவதை நேரில் பார்ப்பதற்காக சதீஷ் தவான் விண்வெளி மைய வளாகத்தில் திரண்டிருந்த மக்கள்.
- 2 Sep 2023 5:53 AM GMT
டெல்லி ஜவஹர்லால் நேரு கோளரங்க திட்ட மேலாளர் பிரேரண சந்திரா கூறுகையில், “சூரியன் தொடர்பாக ஏற்கனவே மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் ஆய்வு செய்துள்ளன. இந்தியாவில் சூரிய கண்காணிப்பகம் இல்லை. ஆதித்யா எல்1 விண்கலத்துடன் சூரியனைப் பற்றிய கண்காணிப்பில் இந்தியாவும் இருக்கும். விண்வெளி வானிலை மற்றும் வரவிருக்கும் விண்வெளி பயணங்களை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும்’ என்றார்.
- 2 Sep 2023 5:48 AM GMT
எல்-1 முனை பகுதியில் 24 மணிநேர தொடர் கண்காணிப்பு சாத்தியம்: மாதவன் நாயர்
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்த திட்டம் மிக முக்கியம் வாய்ந்தது. ஆதித்யா எல்-1 விண்கலம் ஆனது லெக்ராஞ்சியன் முனை 1 பகுதியில் நிறுத்தப்படும். இந்த முனை பகுதியில் பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை ரத்து செய்யப்படுகிறது.
இதனால், குறைந்த எரிபொருளை கொண்டு, நாம் விண்கல பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாம். இதுதவிர, 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிப்பதும் சாத்தியப்படும்.
அந்த விண்கலத்தில் 7 உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன. வளிமண்டலம், பருவநிலை மாற்றம் பற்றிய படிப்புகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பல்வேறு காரண காரியங்களை விவரிப்பதற்கு, இந்த திட்டத்தில் இருந்து கிடைக்க கூடிய தரவுகள் உதவும் என கூறியுள்ளார்.
- 2 Sep 2023 5:43 AM GMT
ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தப்படுவதை நேரில் பார்ப்பதற்காக விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு வந்தனர்.
- 2 Sep 2023 5:13 AM GMT
ஆதித்யா விண்கலம் எல்-1 முனை பகுதியை சென்றடைவது தொழில் நுட்ப ரீதியாக மிக சவாலானது
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஆதித்யா விண்கலம் எல்-1 முனை பகுதியை சென்றடைவது என்பது தொழில் நுட்ப ரீதியாக மிக சவாலானது.
அதன்பின்னர், விண்கலம் அதற்கான சுற்று வட்டப்பாதையில் செல்ல வேண்டும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக மிக துல்லிய முனை பகுதிகள் தேவையாக உள்ளன.
இது அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் அளிக்க கூடியது. ஏனெனில், 7 உபகரணங்கள் சூரியன் மற்றும் அதனை சுற்றி என்ன நடக்கிறது என்றும், அதன் ஆற்றல் மற்றும் பிற காரண காரியங்கள் உள்ளிட்டவற்றை பற்றி புரிந்து கொள்ளும் பணிகளை மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.
- 2 Sep 2023 3:20 AM GMT
ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வாரணாசியில் சிறப்பு பூஜை
இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் இன்று காலை ஹோமம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டவர்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தியிருந்தனர். ஹோம குண்டம் அமைத்து, திட்டம் வெற்றி பெறுவதற்கான மந்திரங்களை அவர்கள் உச்சரித்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
- 2 Sep 2023 2:59 AM GMT
சந்திரயான் - 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்து உள்ளது. சூரியனை கண்காணித்து ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
பூமியில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்ற இடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ள நிலையில் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவுவதற்கான இறுதிக்கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.